Thursday 14 November 2013

முடித்தும் முடிக்காமலுமாக சினிமாவுக்காக தயார் செய்த கதைகள் என்று 20 க்கும் மேலே மனசுக்குள் கிடக்கின்றன.. கதைகள் தயார் செய்வது வாதை என்றால் அவை நிராகரிக்கப்படுவது பெரும் துயர்.. பதினைந்து வருடத்துக்கு மேலான சினிமா வாழ்வு துயரினை தாங்கும்மனவலிமை தந்தது மட்டுமன்றி துயரினை காட்சிக்குள் புன்னகையோடு விதைத்து வைக்கும் ரசவாதத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது.

எத்தனை தயாரிப்பாளர்கள்.. எத்தனை கதை சொல்லல்கள்.. எல்லாம் நமது அனுபவ அடுக்குக்குள் அடுக்கி வைத்த புத்தகங்களின் அத்தியாயங்களாக உறைந்து போய்தான் உள்ளார்கள் அல்லது உள்ளன..

என் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த கதை என்றால் அது குட்டிப் பேச்சியும் M. சிவகுமாரும் என்ற கதைதான்.. அதில் குட்டிப் பேச்சி என்பவள் 8 வயது ரவுடி.. M.சிவகுமார் அவளது தோழனான நாய்.. இவர்களது கதை காட்சிக்கு காட்சி புன்னகையை முகங்களில் வரவைத்தபடி விரியும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர் அசந்து போய் கொஞ்ச நேரம் பேசவே இல்லை.. என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ், யாரிடம் வேலை பார்த்தேன் என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டவர் மிக நம்பிக்கையாக ஒரு வார்த்தை சொன்னார்.. கூடிய விரைவில் படம் துவங்குவோம் என்று..

படபடக்கும் மனதோடு எனது டீமை ரெடி செய்தேன். படப்பிடிப்புக்கு முன்னோட்டமாக இருக்கட்டுமே என்று அதே வயதுள்ள ஒரு சிறுமியையும் அதே போன்ற ஒரு நாயையும் வைத்து மூன்று நாள் ஃபோட்டோசெஷன் தேனியில் வைத்து செய்தோம்.. அன்றைக்கு அப்படத்துக்கு கேமராமேனாக முடிவு செய்திருந்த என் பிரிய நண்பன் தேனி ஈஸ்வர்தான் அந்த காலத்துககும் அழியாத புகைப்படங்களை எடுத்தான்.. மூன்று நாள் கடும் உழைப்பு.. கிட்டத்தட்ட 750 புகைப்படங்கள் என்று திருப்தியாக வந்தது அந்த போட்டோ செஷன்..

அதற்கப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் யூகிக்கக் கூட வேண்டாம்.. வழக்கம் போல கை நழுவிப் போனது ஒருபடம் - ஒரு கனவு..

அன்று எல்லாம் சரியாக நடந்திருந்தால் அழகர்சாமியின் குதிரைக்கு முன்பாக ஈஸ்வர் எனது படத்தில் அறிமுகமாகி இருப்பான்..

எடுத்த படங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இணையத்தில் அவற்றை வெளியிட சிறு தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் அதில் சில படங்களை வைத்து எனது உதவியாளன் ஒருவன் செய்திருந்த டிசைன்களில் ஒன்றை எனது ஓட்டை மொபைலில் படமெடுத்து இணைத்திருக்கிறேன்.. இந்த போட்டோவை விட ஒரிஜினலில் அவை மாயங்கள் நிகழ்த்தும் போட்டோக்கள்..

அதில் இன்னொன்றுதான் இது..

No comments:

Post a Comment