Thursday 14 November 2013

உங்களால் உற்றுக் கேட்க முடிந்தால் கேளுங்கள்
உடல் சிதைத்து கொல்லப்பட்ட
ஒவ்வொரு குழந்தையின் 
தகப்பன்களுடைய 
மௌன அழுகையை..

பூமி 
புரண்டு படுத்தாற்போல
பிள்ளைகளுக்கு ஆதரவாய்
பெருங்கூட்டமொன்று நிற்கிறது அங்கே..

இவர்களில் எத்தனைபேர்
சிதைக்கப்பட்ட என் பிள்ளையை
பெரு மனத்தோடு தம்
குடும்பங்களில் சேர்த்துக் கொள்வார்கள்?

பச்சைக் குழந்தை..
சுடு நீர் பட்டால் அழுவாள்..
இரும்புக் கம்பிகளால்
அடித்துச் சிதைக்கப்பட்டபோது
அப்பா என்றழைத்து
அழுதிருப்பாளோ..

கழுத்து நெறிபட்டபோது
காப்பாற்ற வா அப்பா
என்று கதறி இருப்பாளோ..

ஒன்பது பிராயத்தினள்.
ஒரு வேளை
இருபதின் பிராயத்தினளாக
இருக்கவும் கூடும்..

பெண்ணாய்ப் பெற்றதால்
பெருங்குற்றவாளியாய் நிற்கிறான் அவன்..

அய்யன்களிடமும் அம்மைகளிடமும்
அவன் கேட்கும்
வரம் ஒன்றுதான்..

என் பிள்ளையை
சீக்கிரம்
சாக விடுங்கள்..

அந்தகாரம் சூழும்
இரவின் அழுத்தத்தில்
அவன் நம்பும் கடவுளடத்தில்
அவன் கேட்கும் வரமெல்லாம் ஒன்றுதான்..

தயை கூர்ந்து
என்னை
அவளது
அப்பனாக அன்றி
அம்மையாகச் செய்திடும் அய்யா..

என் பிள்ளையின்
வலியை நான்
ஏற்றுக் கொள்வேன் அய்யா..

No comments:

Post a Comment