Thursday 14 November 2013

திரும்ப கிடைக்காத தருணங்கள் எப்போதும் வாழ்வில் கடந்து போனபடியே இருக்கின்றன. இந்த நாற்பத்து சொச்சம் வாழ்வில் முதன் முறையாக பிறந்த நாளுக்கு நண்பர்கள் அளவில்லாமல் வாழ்த்தியது சென்ற பிறந்த நாளில்தான். இந்த வருடமும் அப்படித்தான் நடக்கப் போகிறது என்ற முன் முடிவுடன்தான் இருந்தேன்.

முந்தாநாளில் இருந்தே வாழ்த்துகள் வர ஆரம்பித்து விட்டன. முதன் முதலில் வாழ்த்து சொன்ன நண்பனே தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிப்போடு வாழ்த்துகளை துவங்கி வைத்தான்..

இவை வருமென்று அறிந்திருந்தாலும் நான் கூழாங்கற்கள் நிகழ்வில் பங்கு பெறுவதில் அனைத்தையும் மறந்திருந்தேன்.. நண்பன் கடங்கநேரியான் ஃப்ராங்க்ளின் யாழி இவர்களின் பெரு முயற்சியால் ஓர் இலக்கிய நிகழ்வு தொய்வின்றி ஏழாம் முறையாகவும் நடக்கிறது என்பது ஆச்சரியத்துக்குரிய செய்திதான்.

பெரிய எதிர்பார்ப்புகள் ஒன்றும் இல்லை. இலக்கிய நிகழ்வுகள் எப்படி நடக்கும் என்று தெரியாதா..? இலக்கிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்கும் என்ற நமது எதிர்பார்ப்புகளை தாண்டிச் சென்றது கூழாங்கற்கள் நிகழ்வு..

நாணலின் நூல் விமரிசனத்தோடு துவங்கிய நிகழ்வு எனக்கானது என்பதை நாணல் பேசத் துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் நான் தெரிந்து கொண்டேன். தவங்கித் தவங்கி பேசத் துவங்கினாலும் அது எனக்கான பேச்சாக இருந்தது. நாணலுக்குப் பின் அமிர்தம் சூர்யா பேசினார். என்ன பேச்சு.. அது புத்தக விமரிசனம் என்பதைத் தாண்டிய பேச்சு. கணேச குமாரன் தன்யவான்தான்.

பின்தான் பேசினார் தமிழச்சி (தங்க பாண்டியன்). எனது அனைத்து நுண்ணுணர்வுகளையும் அந்த பேச்சில் குவிக்க வேண்டி இருந்து. அந்த பேச்சில் எனக்கு பல எதிர்க்கருத்துகள் இருந்தன. அவை அனைத்தையும் தாண்டி அவர் சொன்ன முதல் கருத்திலேயே என்னை வாயடைத்துப் போக வைத்தார். எனக்கு எதிர் கருத்துகள் இல்லாத நபர்களே இல்லை. தமிழச்சியின் கருத்துக்ககான எதிர் கருத்தை இங்கு பதியாததற்குக் காரணமே நமது மன நிலைதான்..

தோழர் இரா எட்வின் பேசிய பேச்சு உணர்ச்சி வசப் பட வைத்தது. அந்த அன்பின்முன் அனைத்து உணர்வுகளும் dwarfed ஆகின. அண்ணன்தானே. அந்த பேச்சு மீதான எனது விமரிசனத்தை பின்னர் வைத்துக் கொள்கிறேன்..

எல்லாம் முடிந்தது. அப்போது எங்கோ போயிருந்த நண்பன் ஃப்ராங்க் ஒரு அட்டைப் பெட்டியை நடு ஹாலில கொண்டு வந்து வைத்தான்.. அது ஒரு கேக். அதில் Happy birth day to Nandan sridaran என எழுதி இருந்தது..

இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று சொல்லியாக வேண்டும். நான் உள்ளிட்ட என் வயதுள்ளோர் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தோம். அதிலும் நான் சினிமாவிலேயே இப்போது இருக்கிறேன். சினிமாவின் படாடோபங்களும் போலிமைகளும் எனக்குத் தெரியும்.

இதே நிகழ்வு சினிமாவில் நிகழ்ந்திருந்தால் அதற்கு நான் எப்படி react செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அளவான கண்ணீர் போல நடித்து கொஞ்சம் கொஞ்சம் கட்டிப்பிடித்து எனது நன்றிகளை பகிர வேண்டி இருந்திருக்கும் என்பது அங்கே அடிப்படை விதி. என் முன்னால் வைக்கப்பட்ட கேக்கை நான் வெட்டியபோது பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் முகமறியா நண்பர்கள். எனது நாற்பதைத் தாண்டிய வாழ்வில் நான் வெட்டிய முதல் பிறந்த நாள் கேக் அதுதான். அந்த கேக்கின் முதல் துண்டை நான் கணேச குமாரனுக்கு ஊட்டினேன். கடைசி துண்டை தான் உண்டதாக நாணல சொன்னான்..

நான் எதற்கு நன்றி சொல்ல முடியும்..? உண்டவர்களுகோ ஊட்டியவர்களுகோ நன்றி சொல்லல் சரிதானா..?

உடன் பிறந்தான் இல்லை. எனக்கு நன்செய்து பலன்கள் பெற்றானில்லை. எதற்காக எனது ஒரு நாளை இவ்வளவு சிறக்கச் செய்தான் கடங்கநேரி யான் மற்றும் ஃப்ராங்க்ளின் குமார்.. இந்த சைத்தான் யாழி கூட எதற்காக இத்தனை அன்பை பொழிந்தான்..?

யோவ் நந்தன் ஶ்ரீதரா.. நீ அன்பற்று தனியாய் அலையும் அநாதைச் சிறுவன் இல்லை.. வயதில் குறைந்தாலும் உன்னை அன்பு செய்து ஆசி வழங்க இங்கே சிலர் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் கடவுளர்கள் இல்லை. நிச்சயம் அவர்கள் உனக்கு அன்னையும் இல்லை. கடவுளுக்கும் அன்னைக்கும் கொஞ்ச◌ேனும் பதில் செய்யப் பாத்தியப்பட்ட பாவிகள் அவர்கள்.. யாரெனக் கேட்டால் நண்பன் என பதில் சொல்வார்கள்..

நம்ப மாட்டேனே.. ஆண் வேடம் போட்டாலும் அவன்கள் என் அன்னைக்கு அடுத்த இடம். புன்னகையோடு உன்னை கிண்டல் செய்தாலும் பிள்ளைக்கு மூத்த பிள்ளை அவர்கள்..

கடங்கு.. ஃப்ராங்க.. யாழி.. என் நாளை நீங்கள் எத்தனை மகிழ்வுறுத்தினீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. ஆயினும் ஒரு நிறைவுற்ற மனதின் நன்றிகளை நீங்கள ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் சாமியோவ்..

புகைப்படத்தில் கேக் வெட்டுகிறார் நந்தன் ஶ்ரீதரன்..

No comments:

Post a Comment