Thursday 14 November 2013

இன்று காலை அவசர வேலையாக எனது ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தேன்.. சாலையோரம் ஒரு பெண், தனது பதின் வயதுகளைக் கடந்து கொண்டிருப்பவள், ஒரு வெடியைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பதை சற்று தொலைவிலேயே பார்த்துவிட்டேன்.. பெண் என்பதாலும் கிட்டத்தட்ட சிறுமி என்பதாலும் அது சிறு வெடியாகத்தான் இருக்கும் என்ற தைரியத்தில் வண்டியை நிறுத்தாமல் முன்னேறினேன்.. சரியாக கடக்கும்போது வெடி வெடித்தது.. எனது இடது காதில் ஙொய்யென்ற ஒரு ரீங்காரம்.. அந்த வெடியின் ஒலியளவு ஆயிரக்கணக்கான டெசிபல்களாக இருந்திருக்கக் கூடும்.. வண்டி தடுமாறிவிட்டது.. அந்த சிறு பெண் என்னைப் பார்த்து எள்ளலாகச் சிரித்தாள்.. எனக்கு காதில் ரத்தம் வருகிறதோ என்ற அச்சம். வண்டியை சற்று தள்ளி நிறுத்தி காதில் விரல் விட்டுப் பார்த்தேன்.. நல்ல வேளை ரத்தம் வரவில்லை.. பன்னிரெண்டு மணிநேரம் ஆகியும் இன்னும் காது மதமதவென்றுதான் இருக்கிறது..

இது இப்படி இருக்க, எங்கள் செல்ல நாய் சின்னா சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. நடு நடுங்கியபடி பீரோவுக்குப் பின்னால் உள்ள இடைவெளியில் புகுந்து கொண்டு வெளியே வர மறுக்கிறான். நாய்களுக்கு மனிதர்களைப் போல பத்துமடங்கு கேட்கும்திறன் உண்டு.. ஒரு சிறு வெடியே அவர்களுக்கு ஆட்டம் பாம் போல கேட்கும்.. காலையில் என் காதைப் பதம் பார்த்த வெடியென்றால்..? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. சுற்றிச் சுற்றி இடைவிடாமல் வெடி போட்டு வெடித்தபடி இருக்கிறார்கள் மனிதர்கள். சின்னாவால் தனது காதைப் பொத்திக் கொள்ள முடியவில்லை.. எப்படி பைத்தியம் பிடிக்காமல் 38 மணி நேர வெடிச்சத்தத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை..

ஒவ்வொரு தீபாவளிக்கும், கார்த்திகைக்கும் அவனுக்கு இதே பாடுதான்..

நாளை மறுநாளோடு இந்த சத்தங்கள் ஓய்ந்துவிடும். சின்னாவின் துயரங்களும் முடிந்துவிடும்.. மனிதர்களின் சந்தோஷங்களுக்காக அவன் நான்குநாள் சாப்பாட்டைத் தியாகம் செய்தது பெரிய விஷயமில்லை.. இந்த நான்கு நாளும் அவன் அனுபவித்த பயங்கரத்தை எப்படி ஈடு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.. நாளை மறுநாளிலிருந்து நடந்தவற்றை மறந்துவிட்டு வழக்கம் போல வாலாட்டிக் கொண்டு எங்களை சந்தோஷப்படுத்தப் போகிறான் சின்னா.. ஆனால் எனது குற்றவுணர்வைத்தான் என்ன செய்வது என தெரியவில்லை.. இத்தனைக்கும் நான் ஒரு வெடி கூட வெடிக்கவில்லை..

1 comment:

  1. மூர்த்தி சிறிது என்றாலும் டெசிபல் பெரிது...
    கடவுளே முதல்ல காது, அப்பறோம் கை..
    கொஞ்சம் கவனம் தேவை டைரடக்கர்

    ReplyDelete