Thursday 14 November 2013

இயக்குனர் மணிவண்ணன் மீதான எனது பார்வை ஒரு எளிய உதவி இயக்குனரின் பார்வையாகவே இருக்கிறது.. அவரை சந்தித்தது மிக சில தடவைகள்தான் இருக்கும்.. முதன் முதலில் நான் வசனம் எழுதிய ராமேஸ்வரம் படத்தில் அவர் நடிக்கையில்தான் அவரை மிக அருகிருந்து பார்க்க முடிந்தது. பல வெள்ளி விழா படங்களை இயக்கிய இயக்குனர்.. மிகவும் சீனியர் என்பது போன்ற எந்த பிம்பங்களையும் தலையில் சுமந்ததே இல்லை அவர்.. முதன் முதலில்அவரை நான் அருகில் பார்த்ததே வித்தியாசமாகத்தான்.. ராமேஸ்வரம் படத்தில் வசனகர்த்தாவாக மட்டும் இல்லாமல் உதவி இயக்குனராகவும் நான் வேலை பார்த்தேன்.. எல்லாரும் எடுத்துக் கொண்ட வேலை போக எனக்கு கொடுக்கப்பட்ட வேலை என்பது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் எனப்படும் துணை நடிகர்களை மேய்க்கும் வேலை.. அது தவிர அனைவருமே ஃபீல்டு கிளியர் செய்வது எனப்படும் படப்பிடிப்பு எல்லைக்குள் யாரும் வராமல் பார்த்துக் கொள்ளும் வேலையையும் பார்த்தபடி இருப்போம்.

அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. மதியத்துக்கு மேல் மணிவண்ணன் வருவார் என்பது எங்களுக்கு சொல்லப் பட்ட செய்தி. காலை படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். பட எல்லைக்குள் யாரும் வந்து விடாமல் நான் கவனமாக ஒரு ஓரமாக நின்று ஃபீல்டு கிளியர் பண்ணிக் கொண்டு இருந்தேன். அப்போது திடீரென யாரோ ஒருவர் என் தோள் மீது தன் கையை வைத்து தாங்கி நின்று கொண்டார். நம்ம மேலயே கை வைக்கிறது யாருப்பா என்பது மாதிரிதிரும்பிப் பார்த்தால் அது இயக்குனர் மணிவண்ணன். அந்த கணம் அது எனக்கு அவர் அளித்த கௌரவம் மாதிரியே பட்டது.. திரும்பிப் பார்த்த என்னிடம் 'ஷாட் முடிஞ்சதும் டைரக்டரை போய் பாத்துக்குறேன். நீ வேலையப் பாரு..' என்று சொல்லிவிட்டு நின்று கொண்டார்.

அதன் பின்னும் படப்பிடிப்பில் நடிக்கும்போதெல்லாம் வசனத்தை அவர் சற்றே மாற்றிக் கொள்ளும் போதெல்லாம் என்னை நேராகவோ குறைந்த பட்சம் கண்களாலேயோ மாற்றிக் கொள்வது சரிதானே என்று கேட்டுக் கொள்வார். முதல் படத்தில் வசனம் எழுதும ஒருவசனகர்த்தாவுக்கு இதெல்லாம் மிகப் பெரிய கௌரவம். இடைப் பொழுதுகளில் ஈழம் பற்றி அவர் சொன்ன பல விஷயங்கள் நான் அது வரை நம்பி இருந்த பல பிம்பங்களை உடைத்து எறிந்தன. ஈழ சம்பந்தப்பட்ட போராட்டங்களின் போதெல்லாம் தவறாது எங்களை உற்சாகப் படுத்தும் ஒற்றை தகப்பனாகவே அவர் இருந்தார்.. அவர் இருக்கும் மேடைகளில் ஈழம் பற்றிய தவறான அரசியலை யாரும் பேசினால் நாசூக்காகவேனும் அதை கண்டிக்காமல் விடவே மாடடார்..

பல எல்லைகளைத் தொட்டிருந்த போதும் எந்த உதவி இயக்குனரும் எளிதில் தொடர்பு கொள்ளக் கூடிய எல்லைக்குள்ளேயே இருந்த எளிய பேரன்பு வாதியாகவே அவர் இருந்தார்.. ஒரு தகப்பனை இழந்தது போலவோ ஒரு அண்ணனை இழந்தது போலவோ நான் இன்று உணரவில்லை.. மனதுக்கு பக்கத்தில்இருந்த ஒருமூத்த நண்பனை இழந்தது போலவே உணர்கிறேன்.. இன்னும் அவர் அருகில் சென்று பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற மனத்தாங்கல் மனதுள் கனத்த மழை நீர் போல தேங்கியே இருக்கிறது.

எனது இழப்பிற்கான அஞ்சலியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

No comments:

Post a Comment