Thursday 14 November 2013

அவன்
சொந்தமாக நிலம் வைத்திருந்ததில்லை..

ஐந்து வயதில்
விடிந்தும் விடியாத காலையில்
அப்பன் அடித்து இழுத்துப்
போனபோது
பரிச்சயப்பட்ட நிலம் அது..


அதன் பசி இவனுக்குத் தெரியும்..
அதன் மொழி இவனுக்குப் புரியும்..

எப்போது புணர்ந்தால்
நல்ல பலன் கிடைக்கும் என்றும்
அது விரும்பாத பொழுதுகளில்
விதைத்தும் விளையாத
தானியங்களையும்
இவனுக்குத் தெரியும்..

மழை பொய்த்த போதுகளில்
கண்ணீரின்றி அது அழுததும்
இவனுக்குத் தெரியும்..

இதோ இந்த
கட்டிடப் பாலையில்
அவன் வேலை செய்யும்
மதுச்சாலை செல்லும் வழியில்
காம்பவுண்டுகளுக்குள்
அழுதபடி இருக்கும்
பழுதுபார்க்கப்படாத தென்னைகளும்
உரம் வைக்கப்படாத மாக்களும்
உகுக்கும் கண்ணீர்
இவன் மேல் மட்டுமே தெறிக்கிறது..

யோவ் பெரிசு
என விளித்து சிறுவன் ஒருவன்
கொடுக்கும் பணத்தில்
விஸ்கியோ பிராந்தியோ
வாங்கிவந்து கொடுக்கிறான் இவன்..

ஆங்கிலத்தில் பேசும் கனவான்கள்
இவனது கணக்கில்
பிழை கண்டு பிடித்து
பத்தோ இருபதோ குறைத்துக்
கொடுக்கும் பொழுதில்தான்
கணக்கில் ஏமாற்றினால்
தப்பில்லை என்பதை
ஒப்புக் கொண்டான் இவன்..

துயர் நெடும் வாழ்வின்
மோட்டார் சத்தம் நிரம்பிய
தனிமை இரவுகளில்
தாவரங்கள் விடும் பெருமூச்சை
உறங்காமல் இசையென கேட்டபடி
இருக்கிறான் இவன்..

கடைசியில் இவனிடம் மிஞ்சியது
பாடல்கள் கூட இல்லை..
பாடல்கள் இருந்த தடங்கள் மட்டுமே..

No comments:

Post a Comment