Thursday 26 December 2013

அன்றைய வசூல்
ஐம்பது ரூபாய்
கொடுக்காததற்காக
அந்த
பூக்காரப் பெண்மணியின்
கற்பு பற்றிய சந்தேகங்களை
பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்
அந்த
கந்து வட்டிக்காரர்..

அண்ணே..
கொஞ்சம் பக்கத்துல 
வாங்கண்ணே
என்றழைத்து
அந்த தட்டை
துழாவி கண்டடைந்து
சத்தமெழுப்பாமல்
ஐந்து ரூபாய்
பிச்சை போட்டு விட்டுப்
போகிறார்
கண் தெரியாத பேனா விற்பவர்..

இரவு நேர
உணவுக்கடையின்
கழிவுகளை அப்புறப்படுத்தும சிறுவன்
கடைதாண்டி
மட்டையாகிக் கிடக்கும்
அவனது அப்பா போன்ற ஒருவனின்
வேட்டியை 
சரி செய்துவிட்டுப் போகிறான்..

தங்கியிருக்கும்
விடுதியின் கைப்பிடிச்
சுவர் தாண்டி
வேடிக்கை பார்க்கிறேன்..

உடல் சுருண்டு
குளிரை
வரவேற்பதாகவோ வெறுப்பதாகவோ
படுத்துக் கொண்டிருக்கிறது செவலை நாய்..

பிடித்தவன் என்றால்
வாலை ஆட்டும்..
பிடிக்காதவன் என்றால்
குலைக்கும் அல்லது கடிக்கும்..
இந்த எளிய நாயின்
நீதிகள் கூட இல்லாத நான்

.....
.....
.....

நாயாகவேனும் பிறந்திருக்கலாமோ..

2 comments:

  1. இது ஒரு நல்ல பழக்கம் உடன் வலைப்பூவில் பதிவிடுவது இன்னும் வீச்சு கொண்டாதாகபடுகிறது எனக்கு

    கொஞ்சம் தலைப்புகளை பதிவிலேயே டைப் செய்து கட் செய்து தலைப்பு பட்டையில் பேஸ்ட் செய்தால் இன்னும் நல்லா இருக்கும்..

    வோர்ட் வேரிபிக்கேசன் இருக்காது என்று நினைக்கிறேன் இருந்தால் நீக்கவும்

    ReplyDelete
  2. வோர்ட் வெரி இல்லை நன்று

    ReplyDelete