Monday 6 January 2014

இன்று ஒரு நண்பர் கேட்டார் : என்ன பாஸ் முடிவெட்டி நாளாச்சா..

எனக்கு சற்றே துணுக்கென்றது.. உண்மையில் இது போன்ற பேச்சுகள் என் சிறுவயதில் கேட்டது. அன்றைய நிலையில் ஒரு சிறுவனைக் கூட தலையில் கற்றை முடியோடு அலைய விடாது இந்த சமூகம். சாமிக்கு நேர்ந்து கொண்டு சடையோடு அலையும் சிறுவர், சிறுமியர் தவிர முடி வெட்டாமல் அலைய யாருக்கும் உரிமை இல்லை அப்போது..

எங்கள் வீடு ஒரு சர்வாதிகாரியின் ராஜாங்கம். அங்கே அப்பாதான் முடிவெடுக்கும் சர்வாதிகாரி. ஆனால் எங்களுக்கு முடியெடுக்கும் சர்வாதிகாரி மூக்கன் என்ற நாவிதர்தான். எப்படி அவர் கரெக்ட்டாக வீட்டுக்கு வருகிறார் என்று தெரியாது. ஆனால் எங்கள் முடி வளர்ந்து அண்டை வீட்டார், தெருவில் போவோர் மற்றும் பிச்சைக்காரர் வரை என்னம்மா புள்ளைக்கு காடு மாதிரி முடி வளந்திருச்சே என்று சொல்லும் மறுநாள் வீட்டுக்கு வந்து விடுவார்..

எங்கள் வீட்டு பின்புறக் கொல்லை கொஞ்சம் நந்தவனம் மாதிரி இடமும், வீட்டுக் கழிவு நீர் தேங்க ஒரு சிறு குட்டையும், மூன்று தென்னை மரங்களும், ஒரு புளிய மரமும் மற்றும் நான்நட்டு வைத்து வளர்ந்த ஒரு அரை நெல்லி மரமுமாக இருக்கும். புளியமரத்தின் நிழல் எல்லாப் பருவத்துக்கும் உண்டு..

மூக்கன் பின்புற வழியாகத்தான் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார். அதை வீட்டுக்குள் என்று சொல்வது தவறு. வீட்டின் கொல்லைக்குள் என்பதுதான் சரி. பின் வாசலை திறந்து விட்டு மூக்கனை உள்ளே அனுமதிக்கும்போதே அடிவயிறு பகீரென்கும். தலைவன் தன்னிடம் இருக்கும் சிறு தகரப்பெட்டியில் இருந்து தனது தொழில் ஆயுதங்களை எடுத்து வெளியில் வைப்பார் - ஆயுதங்களில் கண்ணாடியும் அடங்கும். மூக்கனுக்கு உட்கார சிறு பலகையும் எங்களுக்கு உட்கார அதை விட கொஞ்சம் பெரிய பலகையும் எங்களுக்கு வழங்கப்படும். அதையும் நாங்கள்தான் கொண்டு சென்று அங்கே போட வேண்டும்.

தலைவன் முதலில் தன் பெட்டியில் இருந்து கண்ணாடியை எடுத்து நம் கையில்தருவார். அதைப் பார்த்து நாம் துக்கத்தில் கண்ணீர் உகுக்க முடியாமல் விரக்தியுடன் பார்த்திருக்க, அருமையாய் வளர்ந்த நம் தலைமுடி முதலில் அவரது கத்திரிக்கு பலியாகும். பல இரவுகளில் நம் கனவுகளில் வந்து பயமுறுத்திய சப்தத்தோடு அந்த பழைய தீட்டப்படாத கத்திரியும் நம் முடியை பாதி வெட்டியும், பாதி பிடுங்கியும் குறைக்கத் துவங்கும். நாம் வேதனையுடன் பார்க்கப் பார்க்கவே நம் தலைமுடி சிறிது சிறிதாக குறைந்து ஷாவோலின் படங்களின் குடுமியற்ற சிஷ்யனின் தலைமுடி போல கறைந்து போகும். இதற்கு மேல் வெட்ட முடியாது என நாம் நினைக்கையில் மூக்கன் மிஷின் எனப்படும் முடிவெட்டும் மிஷினை கடைசியாக வெளியில் எடுப்பார்..

அந்த மிஷின் கடைசியாக நமது நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பத்து மணி நேரம் பின்னால் சாணை பிடிக்கப்பட்டிருக்கும். அது முடியை பாதி வெட்டியும் பாதி பிடுங்கியும்தான் தன் வேலையை முடிக்கும். எல்லா சித்திரவதைகளும் முடிந்து நாம் தலைகுனிந்து நிற்க மூக்கன் வீட்டுக்குள் எட்டிப் பார்த்து சாமியோவ்.. என்று அழைக்க, ராணுவ மேஜர் வெளியில் வருவார் (வேறு யார்.. எங்க அப்பாதான்..) என் பின்னந்தலை முடியை கையில் கொத்தாக அள்ளிப் பிடிக்க முயல்வார். இரண்டு மில்லிமீட்டர் முடி எப்படி கைக்கு சிக்கும். முடி சிக்கவில்லை என்றதும் அவர்திருப்திப்பட மாட்டார். பின்னந்தலை முடியை கிள்ளிப் பிடிக்க முடியுமா என்று முயல்வார். அப்படி கிள்ளிப் பிடிக்க முடிந்தால் மூக்கன் குறைவாக வேலை பார்த்திருப்பதாக அர்த்தம். அவர் முறைக்கும் முறைப்பில் மூக்கன் இருக்கிற ரெண்டு மில்லிமீட்டர் முடியையும் மிஷினை வைத்து பிடுங்கிவிடுவார்..

முடிவெட்டிக் கொள்வது ஒரு சித்திரவதை என்றால் மறுநாள் பள்ளி போவது பெரும் சித்திரவதை. சக மாணவர்கள் என்று அழைக்கப்படும் ரெளடிகள் வட்ருப்பி மண்டை.. வட்ருப்பி மண்டை... என்று நம்மை ஒரு நாளுக்கு முப்பத்தைந்து முறை என்ற வீதம், முடி பழையபடி வளருமட்டும் அழைப்பார்கள்.

எங்கள் 'தலை'விதி இப்படி இருக்க, எங்கள் அப்பா உட்பட பெரியவர்கள் மட்டும் பெருத்த முலைகொண்ட பெண்களின் படம் தொங்கும், கண்ணாடி சூழ் சலூன்களில் சென்று முடிவெட்டிக் கொண்டு வருவார்கள். கிட்டத்தட்ட பதிமூன்று வயது வரை சலூன் என்பது என்னைப் போன்றோருக்கு பெருங்கனவாகவே இருந்தது..

எங்களுக்கு முடி வெட்டுவது மட்டும் மூக்கனின் கடமையல்ல. அப்போது என் அப்பா வயதுடைய இளைஞர்கள் எல்லோரும் சலூனுக்கு முடிவெட்டப் போய்விட்டார்கள். இடையில் மாட்டிக் கொண்டது என்னைப் போன்றசிறுவர்களும் எங்கள் பாட்டிகளும்தான்.. எங்கள் தூரத்து உறவு தாத்தாக்களும் கூட மூக்கனிடம்தான் முடி வெட்டிக் கொள்வதையும், க்ஷவரம் செய்து கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.. அந்த க்ஷவரத்தில் சர்வாங்க க்ஷவரமும் உண்டு.. சிறு பிராயத்தில் என்னை முதலில் அதிர்ச்சியுறச் செய்ததும் அந்த சர்வாங்க க்ஷவரம்தான்..

சிறு வயதில் இருந்து எனக்கு பாட்டிகள்தான் அதிகம். நோ தாத்தா.. 
எங்கள்வீட்டில் என் கொள்ளுப்பாட்டி நார்மடிப் புடவை உடுத்திய விதவை. தலைமழித்த கோலத்தோடுதான் அவள் இருக்க வேண்டும். தலைமுடி வளர்ந்து விடாமல் மாதமொரு முறை அவளுக்கு தலைமழித்து விடுவதும் மூக்கன்தான். இது தவிர எங்கள் வீட்டுக்கு சற்று தள்ளி இருந்த சில வீடுகளிலும் இந்த மொட்டைப் பாப்பாத்திகள் இருந்தார்கள். மூக்கன் இல்லாவிட்டால் அவர்களும் தலை மழித்துக கொள்ள முடியாது என்ற நிலைமை இருந்தது..

பின்னர் திடுமென ஒரு நாள் எங்களுக்கு விடுதலை வந்தது. மூக்கன் இறந்து போனார். உண்மையில் அந்த நாளில்தான் அந்த சாதிக்கான கடைசி விலங்கு உடைந்தது என நான் நினைக்கிறேன். மூக்கனுக்கு மகன் இல்லையா, இல்லை இருந்தும் அவர் இது போன்ற ஹோம் விசிட்டுகளை விரும்பவில்லையா என்று தெரியாது. ஆனால் அவருக்குப் பிறகு அந்த நிலை தொடரவில்லை என்பதுதான் நிஜம். (மூக்கனின் மரணம் தாண்டியும் கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் என் கொள்ளுப் பாட்டியும், என் அம்மாவின் அம்மாவான ருக்குப் பாட்டியும் உயிரோடு இருந்தார்கள். எங்கள் நண்பனும், சலூன் வைத்திருப்பவனுமான பாலா என்ற நண்பன்தான் பின்நாட்களில் இருவருக்கும் சிரச்க்ஷவரம் செய்து வைத்தான். ) நல்ல வேளையாக என் நேரடிப் பாட்டியான என் அப்பாவின் அம்மாவை முதன் முதலாக என் அப்பாவும் மற்ற புத்திரர்களும் வைதவ்யத்தின் பேரில்முடி மழிக்கக் கூடாது என்று சொன்னதால் பாலனை அழைத்து வரும் தர்ம சங்கடமான காத்திருத்தல், அழைத்து வருதல், முக்கியமாக பணம்கொடுக்கும் தர்மசங்கடமான கணம் ஆகியவற்றில் இருந்து தப்பித்தோம்..

முடிவெட்டுதல் அப்போது ஆண்களுக்கான விஷயமாக இருந்தது. மற்றடிப பெண்களுக்கு முடியை கொஞ்சமாக வெட்டுதல் கூட கொடூரமாக மறுக்கப் பட்டிருந்தது. எனக்குநன்றாக நினைவிருக்கிறது : என் சொந்தக்கார தோழியொருத்தி..அவளது முடி அவ்வளவு அடர்த்தி.. அவ்வளவு நீளம். கறுத்துத் திரண்ட ராஜ நாகம்போல துள்ளும்.. அவளது முடியின் நுனி சீரற்று இருப்பதாக அவள் ஃபீல் பண்ணினாள்.. யாருக்கும் தெரியாமல் என் உதவியோடு அந்த நுனியை மட்டும் சீராக கட் பண்ணிக் கொண்டாள்..

அடுத்த மாதவிடாய் காலத்தின் முடிவில் அவளதுஅம்மா தலைக்கு தண்ணீர் ஊற்றும்போது அவள் முடியின் நுனியை கட் பண்ணிக் கொண்டதை அறிந்து அவளுக்கு கொடுத்தாளே ஒரு டோஸ்.. அதற்கப்புறம் இன்றுவரை அவள் தன் முடியை சரி செய்து கொள்ள முன்வரவே இல்லை..

பக்கத்து வீட்டில் ஷேபனா, த்ரிஷா என்ற இரண்டு பாப்பாக்கள் இருக்கிறார்கள்.. சென்றவாரம் இருவரையும் அவர்களது அப்பாசலூனுக்கு அழைத்துச் சென்று முடி வெட்டிக் கொண்டு வந்தார்.. பெரியவளுக்கு 70 ரூபாயும் சின்னவளுக்கு 90 ரூபாயும் சார்ஜாம்.. ஏனென்றால் பெரியவளுக்கு வீசிங் பிரச்சினை இருந்தது.. அவளுக்கு ஏசி ஒத்துக் கொள்ளாது.. அதனால் அவளை ஏசி இல்லாது உட்கார வைத்து முடி வெட்டிவிட்டிருக்கிறார் சலூன்காரர்..சின்னவளுக்கு எந்த பிரசச்னையும் இல்லாததால் அவளுக்கு ஏசி போட்டு முடி வெட்டி விட்டிருக்கிறார். அதன் விளைவுதான் அந்த 20 ரூபாய் வித்தியாசம்..

எனக்கு முடி வெட்டிக் கொள்ள 60ரூபாய்தான் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்த விஷயம்..

நான் மயிலாப்பூரில் வேலை பார்த்துககொண்டு இருந்தபோது பார்த்த ஒரு விஷயம் இன்னும் மனதில் நிற்கிறது. அங்கே 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாவிதர் வருவார்.. அங்கே ◌ேப்பர் பொறுக்குபவர்களும், பிளார்ஃபாரம் வாசிகளும்தான் அவரது கஸ்டமர்கள். எங்கள் மூக்கனைப் போலவே சாலையோரமாக அமர்ந்து அவர்களில் விரும்பி வருபவர்களுக்கு முடி வெட்டிவிடுவார்.. எல்லா படி நிலைகளிலும் அவரவர் தகுதிக் கேற்றபடி ஆட்கள் இருந்ததை நான் அங்கேதான் பார்த்தேன்..

அங்கே நான் பார்த்த மற்றொரு உண்மையும் உண்டு.. அங்கே முடிவெட்டிக் கொண்ட ஆண்கள் எல்லோரும் கிராப்புத் தலையையும் , மழித்த முகத்தையும் மெயிண்டெயின் பண்ணிக் கொண்டிருக்க, அங்கே வந்த பெண்கள் எல்லோரும் அவர்களது தலைமுடியை மூன்று செண்டி மீட்டர் அளவு மட்டும் இருக்குமாறு வெட்டிக் கொண்டனர்..

குளிக்காதிருப்பதால் வரும் அரிப்பைத் தவிர்ப்பதைத் தாண்டி அவர்கள் வேறேதையோ தவிர்க்கிறார்கள் என்பது எனக்கு அவர்களைப் பாரக்கும்போதெல்லாம் தோன்றியபடியே இருந்தது..

மொத்தத்தில் வள்ளுவன்தான் லக்கி என்று தோன்றுகிறது.. மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று சொன்னவன் எந்த தொந்தரவும் இல்லாமல் தாடி வைத்தபடிதானேஇருந்தான்..அவனை விட ஹேப்பி மேன் உலகத்தில் யார்தான் உண்டு என நான் நினைத்து நினைத்து ஆச்சரியமுறுகிறேன்..

No comments:

Post a Comment