Wednesday 8 January 2014

ஆமாம்..

அத்தனையையும் எரித்துவிட்டேன்.
நீ வரைந்து கொடுத்திருந்தாயே..
அந்த குழந்தைப் படத்தையும் சேர்த்துதான்..

நீ கொடுத்திருந்த
செண்ட் பாட்டில்
ட்டுப் பென்ற சத்தத்துடன்
வெடித்ததை நீ அறிவாயாக..

படங்கள் ஒட்டிக் கொடுத்திருந்தாயே..
அந்த டைரி
சத்தமில்லமல் எரிந்தது..

உடைகள் எரிகையில்
மிக வெளிச்சமாக இருந்தது..

எத்தனை முயன்றாலும்
அந்த ஆஷ்டிரேயை 
எரிக்க முடியவில்லை..

வாரி வாரிக்
கொட்டுகிறேன்..
வழித்தெடுத்துப் போடுகிறேன்..
என்னதான் செய்தாலும்
அந்த முத்தங்களையும்
உன் புன்னகைகளையும்
மறுபடி மறுபடி
காதில் ஒலிக்கும்
உன் குரலையும்
எரிக்க முடியவில்லைதான்..

எரியாமல் மிச்சமிருப்பவற்றோடு
இப்போது
நானும்தான் நிற்கிறேன்..

சொல்
என்ன செய்ய..?

No comments:

Post a Comment