Sunday 23 March 2014

வேலைக்கு தாமதமாக வரும்
கிழவியை
அவரவர் சொற்களில் ஏசுகிறோம்.
கழுவி வைத்த பாத்திரங்களின்
சுத்தம் பற்றி
எப்போதும் பாராட்ட மறுக்கிறோம்
மீதமான உணவை
பெருமிதத்தோடு அளிக்கிறோம்
மூன்று மகன்கள்
ஏழு மகள்கள்
இறந்த பிறகும்
பிடிவாதமாக
பேரன்களுக்காக உயிர்வாழும்
அவளது உறுநம்பிக்கை பற்றி
நமக்கென்ன கவலை
பல் விளக்காத நம் காலையில்
பால் வாங்கவென தெருவிறங்கும் போதில்
தன் பால்யத்தை
வெள்ளைக் கோடுகளில்
நிரப்பிப் போயிருக்கும் அவளின்
கோலங்களை
நாம்
ஒரேயொரு கணம் வியந்து
நின்றாலும்
அந்த கோடுகள் நமக்கு
தினசரி கோலங்கள்தான் அய்யா..
எனக்கென்ன கவலை என்றே
அடுத்தடுத்த வீடுகளின்
வாயில்கள் தோறும்
தன் பால்யத்தை
நிரப்பிப் போகிறாள் கிழவி..

No comments:

Post a Comment