Sunday 23 March 2014

என்னைப் பார்த்து
நீங்கள் செய்யும் புன்னகை
என்னை
எவ்வளவு நடுக்குறச் செய்கிறது
என
தெரியுமா உங்களுக்கு
ஒரு வேளை
என் தோள் மீது
நீங்கள் கை போட்டால்
நான்
குமைந்து கருகிவிடுவேனாயிருக்கும்.
கேட்டபோது உங்களது
அழைப்பெண் தராதது
எனக்கு
அவ்வளவு நிம்மதியாயிருந்தது.
இறங்குகையில்
உங்களது
கடைசிப் படிக்குப்
பின்னால் இருக்கும்
புற்களில் வசிப்பவனாக இருந்தால்
மகிழ்வே.
யாருக்கும் தெரியாமல்
ஏதோவொரு சாலையில்
எனது மலர்ச்சரத்தை
வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்
உயர்சாதி கார்களில் வரும் நீங்கள்
எதையும் கவனிக்காமல்
சரத்தின் மீது
வண்டியோட்டிப் போனீர்களென்றால்
நன்றி நன்றி நன்றியென்றே
நாளும் பகர்ந்தபடி இருப்பேன் நான்.
தயவு செய்து
மேல் நோக்கி நடங்கள்..

No comments:

Post a Comment